பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாருக்கு அளிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி, அனைத்து ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் சிங் தலைமை வகித்தார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான 70 ஆயிரம் செல்லிடப்பேசி கோபுரங்களை தனியாக பிரித்து துணை டவர் நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் மறைமுகமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பி.ராஜூ, என்எப்டிஇ மாவட்டச் செயலர் லட்சுமணபெருமாள், அகில இந்திய பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் செல்வராஜன், பிஎஸ்என்எல் எஸ்.இ.டபிள்யு மாவட்ட துணைச் செயலர் விஜயன், டிஒஎ நிர்வாகி ஐயப்பன் ஆகியோர் பேசினர்.
இதில் நிர்வாகிகள் சுயம்புலிங்கம், ஆறுமுகம், ஜார்ஜ், ராஜன், சேவியர், ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.