பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் வருவாய் கிராம ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8 ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்கிராம ஊழியர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக அமைப்பின் சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நாராயணபிள்ளை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராஜேந்திரன், மாவட்ட துணைச்செயலர் பிரிட்டில்லா, நாராயண கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் பிரம்மநாயகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட அமைப்பாளர் சசிதரன் நன்றி கூறினார்.
கிராம நிர்வாக அலுவலர்கள்: குமரி மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவர் தங்கதுரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நாகேஷ்வரகாந்த், மாவட்ட பொருளாளர் ஈஸ்வரி, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பீட்டர், ஆன்றனி, சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.