நாகர்கோவிலில் போலி வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ் கொடுத்து ரூ. 53 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஙார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் டிராவல்ஸ் நடத்தி வருபவர் ராஜகோபால் (58). இவர், கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், நான் நாகர்கோவிலில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறேன்.
எனக்கு சொந்தமான இரு வாகனங்கள் கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்களை ஏற்றி செல்ல ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களின் இன்சூரன்ஸ் காலாவதி ஆவதையொட்டி, அவற்றை புதுப்பித்து தருமாறு நாகர்கோவிலைச் சேர்ந்த முகவர் ஒருவரிடம் ரூ. 53 ஆயிரம் கொடுத்தேன்.
அவரும் எனது வாகனங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட இன்சூரன்ஸ் சான்றிதழை தந்தார். அதை பரிசோதித்த பார்த்தபோது, சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. போலியான சான்றிதழை வழங்கிய அவர், எனது பணத்தை மோசடி செய்துள்ளார். ஆகையால் அவரிடம் இருந்து பணத்தை பெற்று தருவதோடு, அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், நாகர்கோவிலைச் சேர்ந்த பெருமாள்பிள்ளை என்பவர் மீது, இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.