வெற்றிக்கு கடின முயற்சியும், உழைப்பும்தான் தேவை என ரஞ்சி கோப்பைக்கான தமிழக அணி மற்றும் தமிழ்நாடு பிரிமியர் லீக் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கிரிக்கெட் அணியின் வீரர் அந்தோணி தாஸ் தெரிவித்தார்.
குமரி மாவட்டம், ஆற்றூர் ஒயிட் நினைவு பிசியோதெரபி கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கிய விளையாட்டு விழாவைத் தொடங்கிவைத்து அவர் பேசியதாவது: பிசியோதெரப்பிஸ்டுகள், விளையாட்டு வீரர்களுடன் உடன் இருப்பவர்கள். ஆடுகளத்தில் வீரர்களுக்கு உடலியக்க சிகிச்சை தேவைப்பட்டால் உடனே ஓடி வருபவர்கள் பிசியோதெரபிஸ்டுகள்.
வெற்றி பெறுவதற்கு கடுமையான முயற்சியும், உழைப்பும்தான் தேவை. திறமை ஒருநாளும் தோற்றுப் போவதில்லை. எத்தனை தோல்விகள் வந்தாலும் வெற்றி பெறுவேன் என்ற தளராத மன உறுதியை கைக்கொள்ள வேண்டும். வெற்றி பெற்றுவிட்டால் போராட்டம் சரித்திரமாக மாறும் என்றார்.
நிகழ்ச்சியில், ஒயிட் நினைவு கல்லூரிகளின் தலைவர் டாக்டர் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பிசியோதெரபி கல்லூரி முதல்வர் சதீஷ் வரவேற்றார். ஒயிட் நினைவு கல்வியியல் கல்லூரி முதல்வர் விக்டர் ராஜ், மருத்துவர்கள் ரோட்ரிக்ஸ், ஆல்ரின் பினோ ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆசிரியர்கள் தியோடர் சாமுவேல், ஸ்ரீராம்குமார், ஷெல்லி நேசகுமார், மார்பல் சிங், ரெஜின் சாம்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.