குமரி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பிரதான அணையான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது.
பேச்சிப்பாறை அணையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த அணையிலிருந்து கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. பின்னர் அணையில் குறிப்பிட்ட அளவில் தண்ணீர் தேக்கப்பட்டதுடன், பாசனத்திற்கான தண்ணீர் இந்த அணையிலிருந்து மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இந்த அணையின் கால்வாயான கோதையாறு இடது கரைக்கால்வாயில் புத்தன் அணை அருகே குற்றியாறு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அணைக்கு உள்வரத்தாக வந்து கொண்டிருந்த தண்ணீர் அணையில் தேங்கியது. குறிப்பாக மேல் கோதையாறு அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலையில் விநாடிக்கு 7ஆயிரம் கன அடி தண்ணீர் பேச்சிப்பாறை அணைக்கு வந்து கொண்டிருந்தது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 24.20 அடியிலிருந்து சுமார் 9 அடி உயர்ந்து 33 அடியாக மாறியது.
இதனிடையே, புதன்கிழமை பிற்பகலில் மழை சற்று தணிந்ததால், பெருஞ்சாணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இரவு 8 மணி நிலவரப்படி பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியும், பேச்சிப் பாறை அணையிலிருந்து விநாடிக்கு 5520 கன அடியும், சிற்றாறு அணைகளிலிருந்து விநாடிக்கு 3940 கன அடியுமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரவில் தொடர்ந்து மிதமான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.