களியக்காவிளை அருகேயுள்ள ஆம்பாடி ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயில் மார்கழி திருவிழா, சமய மாநாடு செவ்வாய்க்கிழமை (டிச. 11) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழா நாள்களில் தினமும் காலையில் கணபதி ஹோமம், உஷபூஜை, பாகவத பாராயணம், மதியம் அன்னதானம், மாலையில் பஜனை, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தொடக்கநாளன்று மாலை 5 மணிக்கு மேல் கோயில் தந்திரி காளியார்மடம் வினீஷ் நாராயணன்போற்றி தலைமையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8.15 மணிக்கு சமய மாநாடு உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
6ஆம் திருநாளான டிச. 16ஆம் தேதி காலை 9 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களின் கலை, பண்பாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 8.15 மணிக்கு வசந்தா மோகன் தலைமையில் மகளிர் சமய மாநாடு நடைபெறுகிறது. டிச. 19ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு சுவாமி யானை மீது எழுந்தருளல் நடைபெறுகிறது.
பின்னர் சுவாமி, குழிஞ்ஞான்விளை, காஞ்சிரம்குழி, தெற்றியோடு, கணியன்விளை, படந்தாலுமூடு, திருத்துவபுரம், மடிச்சல் வழியாக பவனி வந்து கோயிலை வந்தடைகிறார்.
நிறைவு நாளான டிச. 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் திரு ஆறாட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து தீபாராதனை, கொடியிறக்கம் நடைபெறுகிறது.