குமரி மாவட்டத்தில், ஊராட்சிஅளவிலான கூட்டமைப்பிற்கான பெருங்கடன், வங்கி நேரடி கடன், தனிநபர் கடன் மற்றும் சமுதாய முதலீட்டு நிதி என ரூ.2 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
இதையொட்டி, நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமை வகித்து, மேற்கூறிய கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தேவிகோடு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு பெருங்கடன் ரூ. 1 கோடியே 70 லட்சமும், நாகர்கோவில் நகராட்சி பகுதியைச் சேர்ந்த 9 சுயஉதவிக் குழுவிற்கு வங்கி நேரடிக்கடன் ரூ.78 லட்சமும், ஊரகப் பகுதியை சேர்ந்த 13 சுயஉதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.7.,50 லட்சமும், தனிநபர் கடனாக 2 நபருக்கு ரூ.1லட்சமுமாக மொத்தம் ரூ. 2 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரத்துக்கான கடன் உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் சு.சுரேஷ், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் மு.ஆறுமுகம், எம்.கலைச்செல்வி, எம்.கே. பிச்சையப்பா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொகுதி வழிநடத்துநர்கள் கலந்து கொண்டனர்.