குமரி மாவட்ட சிவசேனை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் களியக்காவிளையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட மகளிரணி தலைவர் மைக்கேல்ராணி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பால்நாடார், மாவட்ட செயலர் ஆர். குமரேசன், துணைத் தலைவர் என். ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளவங்கோடு தொகுதி தலைவர் ஜெயச்சந்திரன், பத்மநாபபுரம் தொகுதி தலைவர் முரளி, மாவட்ட மீனவரணி தலைவர் டி. சகாய சஜின், துணைத் தலைவர் ஏ. ஆன்றணி பனியடிமை, இனயம் புத்தன்துறை கிளை தலைவர் ஜெ. புரூஸ், மேல்புறம் ஒன்றிய தலைவர் ஸ்டூவர்ட் ஜான், கட்சி நிர்வாகிகள் மதீசன், பைஜு, ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நியாயவிலைக் கடையில் தமிழக அரசு தரமான அரசி வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் மத்திய அரசு கொண்டு வரவேண்டும், இந்து கோயில்களில் உண்டியல் மூலம் வரும் வருவாயின் ஒருபகுதியை ஏழை விவசாயிகளின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகைக்கும், மருத்துவ செலவுக்கும் பயன்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.