நித்திரவிளை அருகே குடிசையில் தீ: நகை, பொருள்கள் சேதம்
நித்திரவிளை அருகே ஓலைக் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில், 16 பவுன் நகைகள், பணம் உள்ளிட்ட பொருள்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மைதீன்கான் (35) சமையல்காரரான இவரது மனைவி ஜாஸ்மின், 2 பெண் குழந்தைகளுடன் ஓலைக் குடிசையில் வசித்து வந்தார். தற்போது வீட்டில் சிமென்ட் தரைத் தளம் போடும் பணி நடைபெற்று வந்ததால், அருகில் உள்ள உறவினர் வீட்டில் அனைவரும் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஓலைக் குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட அருகில் வசிக்கும் மக்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் வீடு முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் பணம், ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் எரிந்து சேதமடைந்துவிட்டன.
இந்த விபத்து குறித்து நித்திரவிளை போலீஸார் வழக்குப் பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.