ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட புறாவிளை பழங்குடி குடியிருப்புப் பகுதிகளை சமூக சேவகர் மேதா பட்கர் சனிக்கிழமை பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் உரிமைகளுக்காக போராடுங்கள் என்றார்.
குமரி மாவட்டத்திலுள்ள 48 காணி பழங்குடி குடியுருப்புகளில் புறாவிளை, தோட்டமலை உள்ளிட்ட 27 காணி குடியிருப்புகள் ஒக்கி புயலால் கடுமையாகச் சேதமடைந்தன. இங்குள்ள மக்களின் வீடுகளில் புயலில் அழிந்ததுடன், அவர்களின் ரப்பர், மிளகு, முந்திரி, இலவு உள்ளிட்ட பயிர்களும் அழிந்துள்ளன.
இந்நிலையில் சமூக சேவகர் மேதா பட்கர், பச்சை தமிழகம் நிறுவனர் உதயகுமாரன், மேதா பட்கரின் அமைப்பைச் சேர்ந்த கபரியேல், அருள்தாஸ், வழக்குரைஞர் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் இயக்க நிர்வாகி கீதா உள்ளிட்டோர் புறாவிளை பழங்குடி குடியிருப்புக்கு வந்தனர்.
அப்போது அவர், பழங்குடி மக்களுக்கு வன உரிமைச் சட்டப்படி ஏராளமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த உரிமைகளுக்காக போராட வேண்டும். போராட்டமின்றி எதுவும் கிடைக்காது. பழங்குடி மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன் என்றார் மேதா பட்கர்.