கோழிப்போர்விளை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள வேன்களை விடுவிக்கக் கோரி, கன்னியாகுமரி மோட்டார் ஒர்க்ஸ் யூனியன் சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் பிரேமானந்த் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க மாவட்ட செயலர் சோபனராஜ், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் சைமன்சைலஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலர் மனோகரன், போராட்டத்தை தொடங்கிவைத்தார். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் ஜாண்சௌந்தரராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. லீமா றோஸ் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினர். சிபிஐஎம் மாவட்ட செயலர் செல்லசுவாமி நிறைவுரையாற்றினார்.
இப்போராட்டத்தில் கருங்கல் ரவிகுமார், நித்திரவிளை சுந்தர்ராஜ், ஜெஸ்டின்ராஜ், அருமனை வினுகுமார், சரவணன், திங்கள்நகர் மணிகண்டன், பெனடிக்ட் உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்சூரன்ஸ் கட்டணம், சாலை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதால் தவணை செலுத்த முடியாமல் வாகன உரிமையாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் சில காரணங்களை கூறி வேன்களை பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடக்கி வைத்துள்ளனர். இதனால் வேன் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பிடித்து நிறுத்தப்பட்டுள்ள வேன்களை விடுவிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.