களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு டி.சி.கே. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள படை வீரரின் நினைவு ஸ்தூபியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் திங்கள்கிழமை அணிவகுப்பு மரியாதை செலுத்தியதுடன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரமன். மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரான இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பெல்லாம்பள்ளி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்தார்.
இதே போன்று களியக்காவிளை அருகேயுள்ள வண்டங்கனாவிளை பகுதியைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஸ்டான்லி என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தார்.
இந்த படை வீரர்கள் கல்வி பயின்ற படந்தாலுமூடு டி.சி.கே. மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டது.
இந் நிலையில் மகேந்திரகிரி இஸ்ரே விண்வெளி மைய மத்திய தொழிலக பாதுகாப்பு படை துணை கமாண்டோ சப்ரவ் தோண்டியால் தலைமையில் இந்த அமைப்பின் ஆய்வாளர் ஜெயசீலன், உதவி ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் படைவீரர்கள், இங்குள்ள விக்ரமனின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து, துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
இந் நிகழ்ச்சியில் எம்எல்ஏ எஸ். விஜயதரணி, பள்ளித் தலைமையாசிரியர் வில்பிரட் சேம்ராஜ், மேல்புறம் ஒன்றிய அதிமுக செயலர் ஆல்பர்ட் சிங், களியக்காவிளை பேரூராட்சி மன்ற முன்னாள் கவுன்சிலர்கள் என். விஜயேந்திரன், சதீஷ் சந்திரபிரசாத், சுரேஷ்குமார் மற்றும் மாணவர்கள், படைவீரர் விக்ரமனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.