செண்பகராமன் புதூர் ஊராட்சி, நெசவாளர் காலனியில் குடிநீர் மற்றும் மின் வசதி கோரி மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெசவாளர் காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டியும், அதனுடன் இணைந்த மின் மோட்டாரும் பழுதாகி, சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டனவாம். பின்னர் அவை மீண்டும் அமைக்கப்படவில்லையாம். மேலும், தெருவிளக்குகளும் சரியாக எரிவதில்லையாம்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் மக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் அவதியுற்ற மக்கள், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் தேவதாஸ் தலைமையில் திரண்டு ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் குடிநீர்த் தொட்டியையும், மின் மோட்டாரையும் அமைக்க வேண்டும்; பழுதடைந்துள்ள தெரு மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கை நிறைவேறாவிடில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.