கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி நேபாள நாட்டைச் சேர்ந்த கூர்க்கா உயிரிழந்தார்.
நேபாள நாட்டை சேர்ந்தவர் கும்பராஜ் பந்தியா (32), இவர், கருங்கல் பகுதியில் தங்கியிருந்து காவல் பணி செய்து வந்தார். கரந்தவிளை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை குளித்து விட்டு வருவதாக கூறி, வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன் பின்னர், அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை காலை அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக கருங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், குளத்தின் கரையில் கிடந்த உடமைகள் மூலம் நீரில் மூழ்கி இறந்தது கூர்க்கா கும்பராஜ் பந்தியா என்பது தெரியவந்தது.