மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் ரூ. 46.29 லட்சத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மணவாளக்குறிச்சி ஆண்டார்விளை தெருவில் 14 ஆவது நிதித்குழு மானியத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணி, தட்டான்விளை தர்ம சாஸ்தா கோயில் அருகில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தினையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து கடியப்பட்டினம் அரசு தொடக்கப் பள்ளியில் கல்வித்துறை மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ. 5.29 லட்சத்தில் பள்ளி அலுவலகம் மற்றும் வகுப்பறை கட்டட பராமரிப்பு பணியினையும் பார்வையிட்டார். குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம், மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தில் நடைபெற்று வரும் கக்கோட்டுத்தலை ஊராட்சி புதிய அலுவலக கட்டடப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கடியப்பட்டினம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை பரிசோதித்து பார்த்து சத்துணவினை சுத்தமாக குழந்தைகளுக்கு தரமானதாகவும் வழங்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மணவாளக்குறிச்சி பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் சரியான அளவில் குளோரின் கலந்துள்ளதா என கேட்டறிந்தார். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் அப்பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை சுத்தமாக வைத்திடவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் மாடசாமி சுந்தர்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சையத் சுலைமான் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.