குமரி மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் அரசுத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு பழுதடைந்த வீடுகளை பழுதுபார்ப்பது தொடர்பான கிராம சபைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (அக்.23) நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 1993-94-க்கு முன்பு வீடுகள் கட்டப்பட்டு தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை பழுது நீக்கம் செய்வதற்கு அரசு ஆணைபிறப்பித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் 100 வீடுகள் பழுது நீக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டின் பழுது பார்க்கும் செலவு ரூ.50 ஆயிரம் அல்லது பழுது செலவினத்தில் வேலையின் மதிப்பு இதில் எது குறைவோ அத்தொகை பயனாளிக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் கூடிய தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
பயனாளிகள் ஊரகப் பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 1993-94 ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிறிய , பெரிய பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். வீடுகள் பழுது பார்க்க இயலாத நிலையில் முழுவதுமாக பழுதடைந்த நிலையில் இருக்கக் கூடாது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளி ஏற்கெனவே அரசு திட்டத்தின்கீழ் வீடு பெற்ற பயனாளியாக அல்லது பயனாளி உயிருடன் இல்லை எனில் பயனாளியின் வாரிசுதாரராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளி பிற திட்டங்களின்கீழ் வீடு பழுது பார்த்திடும் பொருட்டு ஏற்கெனவே அரசு மானியம் அல்லது இதர அரசு உதவிகள் பெற்றிருக்கக் கூடாது.
இத்திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகள் பட்டியலை கிராம சபையில் ஒப்புதல் பெறும் பொருட்டு குமரி மாவட்டத்திலுள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் அக். 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அந்தந்த கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பு கிராம சபை நடைபெறவுள்ளது. இதில் தகுதியுடைய பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.