குலசேகரம் அருகே கொட்டும் மழையில் தார்ச் சாலை அமைக்கும் பணியைத் தொடங்க வந்த நெடுஞ்சாலைத் துறையினரையும், ஒப்பந்ததாரர்களையும் பொதுமக்கள் தடுத்தி நிறுத்தி, தார் கலவை ஏற்றி வந்த லாரிகளை திருப்பி அனுப்பினர்.
குலசேகரம் கல்லடிமாமூடு சந்திப்பிலிருந்து மலைவிளை வழியாக அண்டூர் செல்லும் சாலை 2.5 கி.மீ. தொலைவு கொண்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரி வந்தனர்.
இதையடுத்து முதற்கட்டமாக கல்லடிமாமூடு சந்திப்பிலிருந்து 1 கி.மீ. தொலைவுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் சீரமைப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டு, செவ்வாய்க்கிழமை பணிகளைத் தொடங்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினரும், ஒப்பந்ததாரரும், தொழிலாளர்களும் வந்தனர். மேலும் தார்க் கலவை ஏற்றிக்கொண்டு சுமார் 5 லாரிகளும், இதர இயந்திரங்களும் வந்தன.
இந்நிலையில் இப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால், இங்கு திரண்ட பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை அமைக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து ஒப்பந்ததாரர் தார் கலவை ஏற்றி வந்த லாரிகளையும், இயந்திரங்களையும் வேறு இடத்துக்கு அனுப்பி வைத்தார்.