சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தி, ஐயப்ப பக்தர் கன்னியாகுமரியில் திங்கள்கிழமை சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை அடுத்த தருவை பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (78). இவர், கடந்த 1963 முதல் 54 ஆண்டுகளாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருகிறார்.
இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே இந்த தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மணவாளக்குறிச்சியை அடுத்த தருவை பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சத்தியசீலன், கன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம் அருகே சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவாக பாஜக மாநில துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி, கன்னியாகுமரி சிவசேனைத் தலைவர் சி.எஸ்.சுபாஷ், கன்னியாகுமரி சுற்றுலா நலச்சங்க செயலர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.