நாகர்கோவிலில் இடி, மின்னலுடன் கன மழை

நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 

நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. 
இந்நிலையில், நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை காலை இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகாலை 5 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது. இடைவிடாது பெய்த பலத்த மழையால், கோட்டாறு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் சிக்கித் தவித்தன. பள்ளி மாணவர், மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் சாலை, நீதிமன்றச் சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை,  கே.பி. ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
நாகர்கோவிலில் 47 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மேலும், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம், இடலாக்குடி, சாமிதோப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோரப் பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை அணைப் பகுதிகளிலும் திங்கள்கிழமை இரவு விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைகள் நிரம்புவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சிற்றாறு 1 அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணையின் நீர்மட்டம் 15.75 அடியாக உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 27 அடியாக இருந்தது. 
அணைக்கு 482 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 657 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 70.30 அடியாக இருந்தது. அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும், மழை பெய்து வருவதாலும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்): பேச்சிப்பாறை-1, சிற்றாறு1- 4, சிற்றாறு 2- 7, ஆணைக்கிடங்கு-3, குளச்சல்-6.4, குருந்தன்கோடு-25.6, அடையாமடை-8, திற்பரப்பு-9.8, நாகர்கோவில்- 47, கன்னிமார்-4.6, பாலமோர்-28.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com