கிள்ளியூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோரத்தில் பழுதடைந்து காணப்படும் பயன்பாடு இல்லாத மின்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: குமரி மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோரங்களில் பல மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட மாங்கரை, தொலையாவட்டம், இடையன்கோட்டை, முன்சிறை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் பல மின்கம்பங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.
பல இடங்களில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பின்பு பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றாமல் பல அடி உயரத்திற்கு பழுதடைந்த மின்கம்பங்களை அப்படியே விட்டு செல்கின்றனர். மேலும், சிலஇடங்களில் சாலையில் 1 அடி உயரத்திற்கு கூர்மையான நிலையில் கம்பிகள் நீட்டி கொண்டு நிற்கிறது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
சில பகுதிகளில் சாலையின் குறுக்காக காணப்படும் மின்கம்பிகள் தாழ்ந்து காணப்படுவதால் அவ்வழியே செல்லும் கனரகவாகனங்களின் மேல் பகுதிகள் கம்பிகளில் உரசி தீப்பொறி ஏற்படுகிறது. இதுகுறித்துபொது மக்கள் மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மின் வாரியத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .
எனவே,கிள்ளியூர் தொகுதிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றியமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் பொதுமக்களை திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் என்றார்அவர்.