குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன்பு இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
தக்கலையை அடுத்த குமாரகோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா (21), , இவர் தேரேகால்புதூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அப்போது இவருக்கும், அருமநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில், ஆயிஷாவை திருமணம் செய்வதாக கூறி, அவருடன் நெருக்கமாக இருந்தாராம். இதில் கர்ப்பம் அடைந்த ஆயிஷா, தன்னை திருமணம் செய்யுமாறு அந்த இளைஞரிடம் வற்புறுத்தினாராம். அவர் மறுத்து வந்ததால், அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் ஆயிஷா புகார் அளித்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வந்த ஆயிஷா, தான் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள், அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனராம். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு ஆயிஷாவை அனுப்பி வைத்த போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.