குமரி மாவட்டம் வேர்க்கிளம்பியில் புதிய டாஸ்மாக் கடை திறந்துவிடக்கூடாது என்பதற்காக இரவு முழுவதும் விழித்திருந்து இளைஞர்கள் கண்காணித்தனர்.
வேர்க்கிளம்பி பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை, அதன் அருகே முண்டவிளை என்ற இடத்தில் திறக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக வியாழக்கிழமை மது வகைகளை ஏற்றிக் கொண்டு வந்த வாகனம் சிறைப் பிடிக்கப்பட்டதுடன், கடையின் முன்பு பொதுமக்கள் திரண்டு முற்றுகையிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் அங்கு கடை திறக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கடை முன்பு குவிக்கப்பட்ட கற்கள்: இந்நிலையில் முண்டவிளை பகுதியில் டாஸ்மாக் கடைக்காக பெறப்பட்டிருந்த கட்டடத்தின் முன்பு சாலையோரமாக பொதுமக்கள் சார்பில் பாறாங்கற்கள் இறக்கி வைக்கப்பட்டன. இரவில் டாஸ்மாக் நிர்வாகம் ரகசியமாக கடையைத் திறந்து வைக்கும் என்ற தகவல் பரவியதால் ஊர் இளைஞர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.