பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி பள்ளியில் மாணவர், மாணவிகளிடம் ஆபாசமாக பேசி வரும் முதுகலை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் மீது முறையான விசாரணை செய்து அவரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை பழிவாங்கக் கூடாது. மாணவர்களிடம் வசூலித்த பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்க கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். சத்தியநாதன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்டத் தலைவர் அமர்நாத், மாவட்ட இணைச் செயலர் சுரேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். திருச்செந்தூர் ஒருங்கிணைப்பாளர் வீரசுதாகர், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் விஜயலட்சுமி உள்பட இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.