கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் சார்பில் மாநில அளவிலான அனைத்துப் பிரிவு மாணவர், மாணவிகளுக்கான சிலம்பம் தேர்வுப் போட்டி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500 மாணவர்கள், 300 மாணவிகள் பங்கேற்றனர்.
முதல் நாள் மாணவர்களுக்கான ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் தலா 5 எடை பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. அதுபோல, இரண்டாவது நாள் மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றன. மூன்றாவது நாள், சிறந்த மாணவர், மாணவிகள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 15 மாணவர், மாணவிகளும் 2018 ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் ஆக்ராவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தலைமை வகித்து, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
ஏற்பாடுகளை லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குப்புசாமி, சிலம்பம் போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரன், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள் சிவராஜ், ராம்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.