தூத்துக்குடியில் டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள, கடல் பாசியில் இருந்து திரவ உரம் தயாரிப்பது குறித்த தொழிற்கல்விப் பயிற்சி பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீன்வளக் கல்லூரி முதல்வர் கோ. சுகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கிவரும் மீன் உணவியல் மற்றும் தீவன நுட்பவியல் துறையின் சார்பில், கடல் பாசியில் இருந்து திரவ உரம் தயாரிப்பது குறித்த ஒருநாள் தொழிற்கல்விப் பயிற்சி டிசம்பர் 20 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. பயிற்சியின்போது, கடல் பாசிகள் என்றால் என்ன? கடல் பாசிகள் எந்த பகுதிகளில் சேகரிக்கப்படுகின்றன, கடல் பாசியில் இருந்து திரவ உரம் எந்தெந்த முறைகளில் தயாரிக்கலாம், கடல் பாசியில் இருந்து திரவ உரம் தயாரித்து அளிப்பதால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்ட தலைப்புகளில் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், கடல் பாசி திரவ உரம் தயாரிப்பது குறித்த செயல் விளக்கமும் அளிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள அனைவரும் ரூ. 300 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 0461- 2340554 என்ற தொலைபேசி எண்ணிலும், 94422 88850 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். மேலும், athithan@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.