தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை ஜனவரி 11ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட 13 மாவட்ட தலைநகரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை ஜனவரி 11 ஆம் தேதிக்குள் வேரோடு அகற்றவேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்று நடைபெற்று வருகின்றன.
அரசு நிலங்கள், நீர் நிலைகள், குளங்கள், ஓடைகள், சாலையோரப் பகுதிகள், அரசு அலுவலக வளாகங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்கள் என அனைத்து இடங்களிலுள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களையும் சம்மந்தப்பட்ட தனியார் நிலங்களின் உரிமையாளர்கள் அனைவரும் உடனே அகற்றி, நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஆதரவு தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.