கோவில்பட்டி பசுமை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழலை வலியுறுத்தி நடைப்பயணம் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
கோவில்பட்டியையடுத்த குருமலையில் தொடங்கிய இந்த நடைப்பயணத்திற்கு ஓய்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியர் ராஜாமணி தலைமை வகித்தார். நடைப்பயணத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை தவிர்ப்பது, மரக்கன்றுகள் நடுவதினால் ஏற்படும் நன்மைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி நடைப்பயணம் மேற்கொண் டனர்.
இந்த நடைப்பயணம் குருமலையையடுத்த தாழையூத்தில் நிறைவு பெற்றது. அங்கு ரவிசங்கர்ராஜா மூலிகை விளக்கம் குறித்தும், வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தைச் சேர்ந்த தேவராஜ் மரக்கன்று நடுதல் குறித்தும், உணவு பாதுகாப்பு அலுவலர் பொன்னுராஜ் உண்ணும் உணவில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்தும், ஓய்வு பெற்ற முதுகலை தமிழாசிரியர் பொன்னுராஜ் இயற்கை வேளாண்மை குறித்தும் பேசினர்.
தொடர்ந்து, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், பசுமை இயக்கச் செயலர் ஜெகஜோதி, ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் கருப்பசாமி, ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் சண்முகக்கனி, மகளிர் குழுவைச் சேர்ந்த ஜெயா, குருலட்சுமி, சமூக ஆர்வலர் ராஜா, தொழிலதிபர் விசுவாசம், வழக்குரைஞர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.