நாசரேத் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் நுழைந்த மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.
நாசரேத் அருகே பிரகாசபுரத்தில் பரிசுத்த பரலோக அன்னை தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த மர்ம நபர்கள் ஆலயத்தின் பக்கக் கதவை கம்பியால் தள்ளி உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்குள்ள பொருள்கள், நகைகளை திருட முயன்றுள்ளனர். ஆனால் ஆலயத்தின் உள்ளே விலை உயர்ந்த பொருள்கள் ஏதும் கிடைக்க வில்லை. எனவே அங்கு புனிதப் பொருளாகப் பயன்படுத்தப்படும் அப்பம்,ரசம் ஆகியவை வைத்துள்ள பொருள்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும் ஆலயத்திலுள்ள உண்டியல் ஞாயிற்றுக்கிழமை காலையில் திறக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டதால் அதை திருடர்கள் உடைக்கவில்லை. உள்ளே எதிர்பார்த்த நகை மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள மாதா சொரூபத்துக்கு அணிவிக்கப்படும் சுமார் 40 பவுன் தங்க நகைகள் வங்கி லாக்கரில் இருந்ததால் அவை தப்பியது.
இது குறித்து சபை சார்பில் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.