ஏடிஎம் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என கூறி பூ வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.28 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் கோபால், பூ வியாபாரி. திங்கள்கிழமை கோபாலின் செல்லிடப்பேசியை தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் கனரா வங்கியிலிருந்து பேசுகிறேன். புது வருடத்தில் ஏடிஎம் ரகசிய எண்ணை புதுப்பிக்க வேண்டும் என்பதால் உங்களது ரகசிய எண்ணை தெரிவிக்கும்படி கூறினராம்.
இதை நம்பிய கோபால் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்ணை தெரிவித்தாராம். இதைத் தொடர்ந்து, மீண்டும் கோபாலை தொடர்பு கொண்ட அதே மர்மநபர் உங்களுக்கு வேறு வங்கியில் சேமிப்பு கணக்கு இருந்தாலும் ஏடிஎம் எண்ணை தெரிவிக்கும்படி கூறினாராம். இதில் சந்தேகம் அடைந்த கோபால் தான் வங்கியில் நேரடியாக தெரிவிக்கிறேன் என கூறவும் செல்லிடப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதாம். இதையடுத்து கோபால் உடனடியாக கனரா வங்கியின் ஸ்ரீவைகுண்டம் கிளைக்கு சென்று விசாரித்த போது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து மும்பை மற்றும் மைசூரில் உள்ள இரண்டு வெவ்வேறு கணக்கிற்கு ரூ.28 ஆயிரம் மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். ஆய்வாளர் வெங்கடேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.