செய்துங்கநல்லூர் அருகே உள்ள 60அடி கிணற்றில் தவறிவிழுந்த முதியவரை ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
வடக்கு காரசேரியைச் சேர்ந்தவர் கு. நடராஜன் (70). ஓய்வு பெற்ற கிராம உதவியாளர். இவர் ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில், தான் வளர்க்கும் ஆடுகளுக்கு இலை பறிப்பதற்காக அதே ஊரை சேர்ந்த மூக்கன் தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் உள்ள சுமார் 60அடி ஆழமுடைய கிணற்றில் நடராஜன் தவறி விழுந்துவிட்டாராம். அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலையடுத்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறையினர் வந்து கயிறு மூலம் கிணற்றில் இறங்கி நடராஜனை மீட்டனர். இதில் காயமடைந்த அவரை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.