கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் நெசவுத் தொழிலை ஊக்குவிக்கவும், தமிழர்களின் பாரம்பரிய கதர் ஆடை அணிய வலியுறுத்தியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தார். மைக்ரோபாயிண்ட் தொழிற்பயிற்சி நிலைய நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் கெளரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழர்களின் பாரம்பரிய கதர் ஆடை அணிய வலியுறுத்தியும், பள்ளி மாணவர்கள் கதராடை அணிந்து நெசவுத் தொழிலை ஊக்குவிக்க வலியுறுத்தியும் பேசினார். பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் ராணுவவீரர் சங்கிலிப்பாண்டியன், சீடு அறக்கட்டளையைச் சேர்ந்த கற்பகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புனித ஓம் பள்ளித் தாளாளர் உஷாராணி வரவேற்றார். புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.