பாண்டவர்மங்கலம் ஊராட்சி, தாசில்தார் நகர் பகுதியில், அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சேவகப்பாண்டியிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், ஆய்வு செய்து முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் தெரிவித்தார். மேலும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இலுப்பையூரணியில், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமில், பசுமை வீடுகள் திட்டம் 2015-2016-இல் கட்டுவதற்கு உரிய ஆணை வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிக்கான இரண்டு கட்ட காசோலை வழங்கப்பட்டும், 3ஆவது கட்ட காசோலை தற்போது வரை வழங்கப்படவில்லையாம். இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளான மாரியம்மாள், பாலமுருகன், மாரீஸ்வரி உள்ளிட்டோர் புதன்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனர். பின்னர், காசோலையை உடனடியாக வழங்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அவர்கள் மனு அளித்தனர்.