விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத் தொகையை அறிவிக்கும் வரை, பொங்கல் இலவச தொகுப்பை பெற மாட்டோம் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் மாரிச்சாமி வெளியிட்ட அறிக்கை: தென் மாவட்டங்களில் உள்ள மானாவாரி விவசாயிகள், பருவமழையை நம்பி, முதல் கட்ட பணிகளுக்காக ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் வரை செலவு செய்து, கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். பருவமழை பொய்த்ததால், பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, பாசி, மிளகாய், வெங்காயம், வாழை, நாற்றுச்சோளம், நவதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் முளைத்து, கருகி விட்டன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தென் மாவட்ட மானாவாரி விவசாயிகளுக்கு, சிறுகுறு விவசாயி என பாகுபாடின்றி ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இந்த வார இறுதிக்குள் வழங்கவில்லையென்றால், அரசு வழங்கும் பொங்கல் இலவச தொகுப்பை விவசாயிகள் பெற மாட்டார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.