ஆறுமுகனேரியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்மநபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
ஆறுமுகனேரி, எஸ்.ஆர்.எஸ், கார்டன் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் சந்துரு என்ற காமேஷ்வரன்(64). புரோஹிதர். இவரது மனைவி உஷா. ஓய்வுபெற்ற ஆசிரியை. இத்தம்பதிக்கு 3 மகள்கள். 2 பேர் திருமணமாகி சென்னையில் வசிக்கின்றனர். காமேஷ்வரனும், உஷாவும் கடைசி மகளுக்கு வரன் பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தனராம்.
இந்நிலையில் இவரது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நிகழ்ந்திருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த ஆறுமுகனேரி போலீஸார் சென்று விசாரித்தனர். வீட்டில் பாதுகாப்பான இடத்தில் நகை, பணம் வைக்கப்பட்டிருந்ததால் அவை திருடு போகாமல் தப்பின. இதனிடையே, சம்பவ இடத்தை திருச்செந்தூர் துணைக் கண்காணிப்பாளர் ராமராஜன், ஆத்தூர் ஆய்வாளர் விஜயகுமார், ஆறுமுகனேரி உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.
தூத்துக்குடியிலிருந்து விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.