ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் உள்பட பல்வேறு பணிகளுக்கான கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தியால் கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பணிகள் முடங்கின. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
புதிய வாகனங்களுக்கு பதிவு எண், பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை திரளானோர் வந்திருந்தனர்.
இந்நிலையில், மேற்கூறிய பணிகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலமாக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத் திடீரென பணிகளை நிறுத்திவிட்டாராம். எனினும், புதிய இருசக்கர வாகனங்களுக்கு பதிவு எண் பெறுவது உள்பட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக பிற்பகல் 1 மணி வரை பலர் காத்திருந்திருந்தனராம். ஆனால், எந்தவொரு பணியும் நடைபெறவில்லையாம். இதனால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: ரயில் கட்டணம், பேருந்து கட்டண உயர்வு திடீரென அறிவிக்கப்பட்டிருந்தால், ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களிடம் அறிவித்த அதிக கட்டணத்தை மீண்டும் வசூல் செய்வது வழக்கம், அதேபோல அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை முறைப்படி வசூலித்து, உரிமங்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை தொய்வுமின்றி தொடரலாம் என்றனர்.