கோவில்பட்டி வட்டத்தில் வறட்சியால் பாதித்த பகுதிகளை அமைச்சர் தலைமையிலான அரசுக் குழுவினர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோவில்பட்டி வட்டத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாக விளைச்சலின்றி விவசாயிகள் மிகுந்த சிரமத்த்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வையிட தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரேஸ்குமார், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆகியோர் தலைமையில் சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்திருந்தனர்.
அதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ரவிகுமார், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுந்தர்ராஜ், உமாமகேஸ்வரி,கோட்டாட்சியர் கண்ணபிரான், வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன், வேளாண்மைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர்.
அப்போது, கோவில்பட்டி அருகேயுள்ள கரிசல்குளத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், சிந்தலக்கரை,ஈராச்சி,பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி பாதித்த விவசாய நிலங்களை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு,குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரேஸ்குமார் ஆகியோர் தலைமையிலான அரசுக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.