திருச்செந்தூரில் கார் கண்ணாடியை உடைத்து, பொருள்களை திருட முயன்றோரைப் பிடிக்க உதவிய பெண் துப்புரவுத் தொழிலாளியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
திருச்செந்தூர் கோயில் நாழிக்கிணறு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் கண்ணாடியை உடைத்து, அதில் இருந்த பொருள்களை சிலர் திருட முயன்றனர். அப்போது, அந்தப் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த முருகம்மாள் சாமர்த்தியமாக செயல்பட்டு, திருட முயன்றவர்களைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, பிடிபட்டவர்கள் மூலம் அவரது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்களில் சிலர் மீது ஏற்கெனவே காவல் நிலையத்தில் இதேபோல திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, இவர்களைப் பிடிக்க உதவிய முருகம்மாளை, தூத்துக்குடிக்கு அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், அவருக்கு வெகுமதி வழங்கினார்.