கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் இறந்தார்.
கயத்தாறு சக்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பூலையா மகன் ஆட்டோ ஓட்டுநர் பெருமாள் (33). இவர், அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் அய்யாச்சாமி மகன் மகாராஜன் (30) என்பவருடன் பைக்கில் சென்றாராம். கழுகுமலையையடுத்த சங்கரலிங்கபுரம் அருகே திடீரென பைக் நிலை தடுமாறியதில் சாலையில் விழுந்த இருவரும் காயமடைந்தனர்.
இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு பெருமாள் இறந்தார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.