திருச்செந்தூரில் திருடு போன பைக்கை வாகனச் சோதனையின் போது போலீஸார் மீட்டனர்.
திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம், முத்துநகரைச் சேர்ந்த பிச்சாண்டி மகன் முருகன் (59). திருச்செந்தூர் சிவன் கோயில் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். கடந்த 7-ஆம் தேதி பைக்கை கடைமுன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது பைக் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் திருக்கோயில் காவல் ஆய்வாளர் பெரி.லட்சுமணன் உள்ளிட்ட காவல்துறையினர் குலசேகரப்பட்டினம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவர் சங்கரன்கோவில், குருக்கள்பட்டி, வடக்குத்தெருவைச் சேர்ந்த ஆனந்த ராஜ் (25) என்பதும், அவர் தான் முருகனின் பைக்கை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.