கயத்தாறு அருகே லாரி ஓட்டுநரை கொலை செய்ய முயன்றதாக சகோதரர் உள்பட இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கயத்தாறையடுத்த சாலைப்புதூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் லாரி ஓட்டுநர் முத்துப்பாண்டி (32). இவருக்கும், இவரது சகோதரர் கி. வெயிலுமுத்துவுக்கும் (34) இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முத்துப்பாண்டி தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அவரது சகோதரர் வெயிலுமுத்து (34) மற்றும் வெள்ளாளங்கோட்டை நடுத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் செந்தூர்பாண்டி (27) ஆகிய இருவரும் பணம் கேட்டு தகராறு செய்தனராம். தகராறு முற்றிய நிலையில், செந்தூர்பாண்டி, முத்துப்பாண்டியை அரிவாளால் வெட்ட முயன்றாராம்.
தப்பி ஓடிய முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரை கொல்ல முயன்றதாக அவரது சகோதரர் வெயிலுமுத்து மற்றும் செந்தூர்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.