இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 7 மீனவர்களும் ஆட்சியருடன் சந்திப்பு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 7 மீனவர்களும், புதன்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 7 மீனவர்களும், புதன்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் அருகேயுள்ள சங்குகுளிகாலனியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், கடந்த 16ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த படகு ஓட்டுநர் விக்டர்  தலைமையில் அஜித், வினோத்,  பிரவீன்,  வெற்றிவேல், லியோ, அமலன் ஆகிய 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், சர்வதேச எல்லையை மீறி இலங்கை கடற்பகுதிக்குள் சென்றதாகக் கூறி, கடந்த 21ஆம் தேதி இலங்கை கடற்படையினர் 7 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேரும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.  இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, தூத்துக்குடியைச் சேர்ந்த 7 மீனவர்கள் உள்ளிட்ட 51 பேர் விடுவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மீனவர்கள் 7 பேரும் புதன்கிழமை அதிகாலை தூத்துக்குடி வந்தடைந்தனர். இதையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்துக்குச் சென்று ஆட்சியர் ம. ரவிகுமாரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் மீனவர்கள் கூறுகையில், தங்களை சர்வதேச கடல் எல்லைக்கு முன்பாக கைது செய்த இலங்கை கடற்படையினர், கழிவறையில் தங்கவைத்ததுடன் போதிய உணவு அளிக்காமல் கொடுமைப்படுத்தினர் என புகார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com