தூத்துக்குடி பெயிண்டர் கொலை வழக்கு: தாய், மகன் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சரண்
தூத்துக்குடி பெயிண்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தாய், மகன் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் ராய்நகரைச் சேர்ந்தவர் மு. மாரிமுத்து (31). இவர் கஞ்சா விற்பதாகக் கூறி, போலீஸில் காட்டிக் கொடுத்ததாக, அதே ஊரைச் சேர்ந்த பெயிண்டர் கா.சங்கர்ராஜா (28) என்பவரை, மாரிமுத்து அவரது தாயார் பாத்திமா மற்றும் ஜெமின்சுரேஷ், நந்தல் என்ற முனியசாமி, ராஜா, குமார் ஆகிய கும்பல் கடந்த 6ஆம்தேதி அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிந்து மாரிமுத்து உள்ளிட்ட 6 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் மாரிமுத்து, அவரது தாயார் பாத்திமா ஆகியோர் சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு ) முருகன், அவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.