காசோலை மோசடி வழக்கில் நிலத்தரகருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள பேரூரணி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (45). நிலத்தரகர். இவர் தனது பெயரில் 3 ஏக்கர் 77 சென்ட் நிலத்துக்கான பவர் இருப்பதாகக் கூறி, மேலகூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த ராமசாமியிடம் (52) ரூ.17 லட்சத்துக்கு விற்க முயன்றாராம். இதற்காக முதல்கட்டமாக ரூ. 8 லட்சத்தை அவர் ராமசாமியிடம் வழங்கினாராம்.
இதற்கிடையே, நிலத்தில் வில்லங்கம் இருப்பது தெரியவந்ததால் நிலத்தரகர் ராமசாமியிடம் பணத்தை திரும்பத் தருமாறு மேலகூட்டுடன்காடு ராமசாமி கேட்டதைத் தொடர்ந்து 28.10.13 அன்று ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்துக்கான 2 காசோலைகளை அவர் வழங்கியுள்ளார். ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி காசோலை மோசடி தடுப்பு விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி, குற்றம் சாட்டப்பட்ட நிலத்தரகர் ராமசாமிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 6 லட்சத்து 20 ஆயிரத்தை ஒரு மாதத்துக்குள் பாதிக்கப்பட்ட ராமசாமிக்கு வழங்குமாறும் உத்தரவிட்டார்.