தூத்துக்குடியில் இறால் பண்ணை உதவியாளர் சான்றிதழ் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் கோ.சுகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் தருவைக்குளத்தில் இயங்கி வரும் கடற்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறை சார்பில், ஜன. 18ஆம் தேதி முதல் இறால் பண்ணை உதவியாளர் குறித்த அடிப்படை தொழில்நுட்ப சான்றிதழ் பயிற்சி ஒரு மாத காலம் வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் இறால் வளர்ப்புக் குறித்த தொழில்நுட்ப வகுப்புப் பயிற்சி மற்றும் செயல்விளக்க பயிற்சிகள் முறையே 7 நாள்கள் மற்றும் 21 நாள்கள் அளிக்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் ரூ.1000 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பயிற்சியின் முடிவில் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும், ஜன. 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 0461-2277424 மற்றும் 2340554 ஆகிய தொலைபேசி எண்களிலும், 9442288850 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
மேலும், பேராசிரியர் மற்றும் தலைவர், கடற்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறை, நீர்வாழ் உயிரின வளர்ப்பு பள்ளி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தருவைக்குளம், தூத்துக்குடி 628105 என்ற முகவரியில் நேரிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.