கோவில்பட்டியில் ஒர்க்-ஷாப் மற்றும் பெயிண்டிங் நிலையத்தில் நின்று கொண்டிருந்த காருக்கு தீ வைத்து, டயர்கள் மற்றும் லாரியில் உள்ள பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டியை அடுத்த வடக்கு இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் பூ.செண்பகராஜ் (33). இவர் சாத்தூர் சாலையில் வேலாயுதபுரம் அய்யனார் கோயில் அருகே ஒர்க்-ஷாப் நடத்தி வருகிறார். வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு வழக்கம்போல ஒர்க்-ஷாப்பை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த வடக்குத் திட்டங்குளம் அக்ரஹாரத்தைச் சேர்ந்த மு.பேச்சையாவின் (52) லாரியில் இருந்த ஒரு பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுபோல, ஒர்க்-ஷாப்பின் பூட்டை உடைத்து அங்கிருந்த 25 லிட்டர் டீசல் மற்றும் உதிரிப் பாகங்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
அருகேயுள்ள அகிலேஷ்குமாருக்கு (28) சொந்தமான பெயிண்டிங் நிறுவனம் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின் பகுதியில் இருந்த 2 டயர்களையும் திருடிச் சென்றுவிட்டனர். மேலும், அதன் அருகே வேலாயுதபுரத்தைச் சேர்ந்த தவசி மகன் துரை(45) நடத்தி வரும் டிங்கர் ஒர்க்ஸ் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்து சேதப்படுத்தினர்.
தகவலறிந்தவுடன் கோவில்பட்டி தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தனர். இருந்த போதும் ஒரு கார் தீயில் முற்றிலும் கருகி சேதமடைந்தது. இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.