தூத்துக்குடியில் ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி, கணபதிநகரைச் சேர்ந்த வேலு மகன் முத்துவேல் (22). கட்டடத் தொழிலாளி. இவர், தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் (22) என்பவருடன் தாளமுத்துநகர் அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாகச் சென்ற ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் மோதியதாம். இதில், சம்பவ இடத்திலேயே முத்துவேல் உயிரிழந்தார்.
காயமடைந்த ஜார்ஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப்பதிந்து, ஆட்டோ ஓட்டுநர் தாளமுத்துநகரைச் சேர்ந்த தங்கமுத்து(28) என்பவரை கைது செய்தனர்.
முதியவர் காயம்: இனாம்மணியாச்சி கீழத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் சமுத்திரக்கனி(43). இவர் தனது உறவினரான சங்கர்சுப்பு(72) என்பவருடன் சைக்கிளில், கோவில்பட்டி புறவழிச் சாலையில் உள்ள இந்திரா காலனிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தாராம்.
அப்போது, அவ்வழியாகச் சென்ற பைக், இவர்களது சைக்கிள் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த சங்கர்சுப்பு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, பைக்கில் வந்த நடராஜபுரம் பாலமுருகன்(23) என்பவரிடம் விசாரிக்கின்றனர்.