தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை(ஜன.19)முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தெரிவித்தார்.
வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு கடந்த 25 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாத நிலை உள்ளது. சில இடங்களில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் சீரான குடிநீர் வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது குடிநீர் தேவைக்காக பாபநாசம் நீர்த்தேக்கத்திலிருந்து 204 கன அடி நீர் மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு வியாழக்கிழமை (ஜன. 19)முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார் அவர்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார், மாநகராட்சி ஆணையர் கே. ராஜாமணி, மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சுந்தரராஜ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன், மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.