ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்டக் கிளை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கலையரசன் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகளும், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
அஞ்சல் ஊழியர்கள்: தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்புச் செயலர் மனோகரன் தேவராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 9 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி அனல் மின்நிலைய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், அனல் மின்நிலைய நுழைவு வாயில் முன்பு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதேபோல, வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம், சுகாதாரம் மற்றும் செவிலியர் சங்கம் சார்பிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, ஸ்ரீவைகுண்டத்தில் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஆறுமுகப்பெருமாள் தலைமையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடன்குடியில் பேரணி: உடன்குடியில் சமூக ஆர்வலர் குணசீலன் தலைமையில் பல்வேறு சமூக அமைப்புகள் பேரணி நடத்தின. இதில், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் முகைதீன், காமராஜர் இளைஞர் மன்றம் ஜெயசெல்வகுமார், பசுமை இயக்கம் மணிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.