தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 206 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வுத் திட்டம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை, அயல்நாட்டு வேலைவாய்ப்புத் துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியன சார்பில், தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் போப் கலைக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள 61 நிறுவனங்கள் பங்குபெற்றன. 1,532 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 206 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 572 பேர் முதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட 206 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி ஆட்சியர் ம.ரவிகுமார் பேசியது:
திறமையானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எப்போதும் உண்டு. படிப்புடன் உழைப்பும் திறமையும் இருந்தால் தான் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், உயர்கல்வி கற்பதற்கும் அரசு வழங்கும் தேவையான அனைத்து உதவிகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு உயர் பதவிகளில் அமர்வதை மாணவர்கள் தங்களது லட்சியமாக கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி சார்-ஆட்சியர் தீபக் ஜேக்கப், மகளிர்த் திட்ட இயக்குநர் இந்துபாலா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன், மாவட்ட புதுவாழ்வு திட்ட மேலாளர் கர்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜராஜன், தாட்கோ மேலாளர் யுவராஜ், போப் கலைக் கல்லூரி செயலர் ஜேசு சகாயம், முதல்வர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.