தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர், மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டப் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாதெமி சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்வழிக் கல்வி பயிலும் பள்ளி மாணவர், மாணவிகள் கலந்துகொள்ளும் மினி மாரத்தான் ஓட்டம் மற்றும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டப் போட்டியை புறநகர் காவல் துணைத் கண்காணிப்பாளர் சீமைச்சாமி தனித்தனியே கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், கின்ஸ் அகாதெமி நிர்வாக இயக்குநர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆண்களுக்கான ஓட்டத்தில் 254 பேரும், பெண்களுக்கான ஓட்டத்தில் 61 பேரும் கலந்துகொண்டனர்.
ஆண்களுக்கான போட்டியில், தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அஜித்குமார், முத்துப்பாண்டி ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். மூன்றாவது இடத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் பள்ளி மாணவர் ரஞ்சித்குமார் பெற்றார்.
பெண்களுக்கான போட்டியில், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் பள்ளி மாணவிகள் ஜெயபாரதி முதலிடத்தையும், விளாத்திகுளம் அரசு பள்ளி மாணவி ஜெயமாலினி இரண்டாமிடத்தையும், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் பள்ளி மாணவி தைரியலட்சுமி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர், மாணவிகளுக்கு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் விழாவில் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.